5வது ரவுண்டு ஆரம்பம்.. சென்னையில் கொட்டப்போகும் கனமழை! இன்று இரவு முதல் கச்சேரி.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: வடகிழக்குப் பருவமழையின் 5வது ரவுண்டு ஆட்டம் இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நாளை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் வேலையைக் காட்ட உள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெதர்மேன் அலர்ட்: இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12 முதல் 17 ஆம் தேதி வரை மழையின் தீவிர நிலை. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை இடைவெளி விட்டு விட்டு தினசரி மழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை காலை இந்த பருவமழையின் 5ஆவது ரவுண்டு ஆட்டம் தொடங்கும். நாளை, நவம்பர் 12 ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
எங்கெல்லாம் மழை?: மேலும், "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டாவின் சில பகுதிகளிலும் மழை பெய்யும். பாண்டிச்சேரி, பெங்களூரிலும் மழை பெய்யக்கூடும்" என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
முன்னதாக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், நாளை பெய்வதற்கு முன்கூட்டிய ட்ரெய்லர் மழை இன்று பெய்யும் என்றும், இந்த மழை 15-20 நிமிடம் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழையின் முக்கிய சீன் இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் எனவும் கூறி இருந்தார்.

5 நாட்களுக்கு மழை: அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நாளை, KTCC மண்டலம் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் தவிர்த்த டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் (நவம்பர் 13) காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications