Red Alert: அதிகன மழை எச்சரிக்கை.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் இன்று ஒருநாள் மூடப்படுகின்றன. பொதுமக்களின் உதவிக்காக மழை, பேரிடர் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவிக்கான எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரியில் கன மழை முதல் அதி கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உதவிக்காக மழை, பேரிடர் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவிக்கான எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளன.
மழை, மண் சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 94887-00588 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 வீரர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications