மிரட்டும் கனமழை.. சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் நாளை மாலை வரை சென்னையில் அரும்பாக்கம் மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்களை மக்கள் பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் "ஃபெஞ்சல்" புயல் இன்று மதியம் உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (நவம்பர் 30ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும்.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 30ம் தேதியான நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறுிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் வாகனங்கள் நிறுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛முந்தைய கால அனுபவத்தின் அடிப்படையிலும் தண்ணீர் தேங்கும் என்பதாலும் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் இன்று மாலை முதல் நாளை மாலை முதல் வாகனங்களை நிறுத்த வேண்டாம். இதுதொடர்பாக வானிலை நிலவரத்தை பொறுத்தமட்டில் அடுத்தக்கட்ட அறிவிப்பு என்பது வெளியிடப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின்போது இந்த 2 மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக இந்த முறை முன்னெச்சரிக்கையாக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications