இந்த டிட்வா புயலால் சென்னைக்கு மழை வருமா வராதா? வெதர்மேன் தகவல்!
சென்னை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்யுமா பெய்யாதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அப்படியே மழை வந்தாலும் எப்போது வரும் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையை நோக்கி புயல் நெருங்கி வரும் போது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. இன்று இரவு முதல் நாளை காலைக்குள் சில மேகக் கூட்டங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் சென்று வலுவிழப்பதற்கு முன்பு இந்த வெத்து புயல் சற்று அதிக மழைப் பொழிவை கொடுக்கலாம் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் தற்போது எங்கடா அவன் என்ற நிலையில் இருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 30- 70 மி.மீ. மழை இன்று காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ளது.
இன்னும் மழை அளவு அதிகரிக்குமா, மேகக் கூட்டங்கள் மீண்டும் உருவாகுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்று சென்னையில் அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் புயல் வலுவிழந்து, மேகக் கூட்டங்களை இழந்துவிட்டது.
நாளை காலை வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 50 முதல் 70 மி.மீ. மழை பெய்தால் நன்றாக இருக்கும். அடுத்த 24 மணிநேரத்தில் நமக்கு மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த புயல், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு டம்மியா இல்லையா என்பது நாளை காலைதான் முடிவு செய்ய முடியும்.
ஏனென்றால் டெல்டா மாவட்டங்கள் முதல் புதுவை வரை நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சென்னைக்கு நவம்பர் மாதங்களில் பெய்த மழைகளில் இதுதான் மோசமான நவம்பர் ஆகும் என தெரிவித்துள்ளார்.
அது போல் அவர் மேலும் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது: வறண்ட காற்றாலும், ஈரக்காற்று முறிவாலும் டிட்வா புயலானது காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது. இது மயிலாடுதுறைக்கு 140- 220 மி.மீ. மழையை கொடுத்துள்ளது.
அது போல் டெல்டா மாவட்டத்தில் தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் எந்த மேகக் கூட்டங்களையும் உருவாக்காமல் வெறும் கூடாகவே காற்றழுத்தம் நிலவும். இன்றைய தினம் பிற்பகுதியில் வடதமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அருகே மேகக் கூட்டங்கள் உருவாகும். சென்னைக்கு அருகே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications