பத்து மணி வரை பந்தாடப் போகுது மழை.. சென்னையன்ஸ் கவனமாக இருக்கனும்! 12 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து நிலையில், மே இரண்டாவது வாரம் வெயிலுக்கு முடிவு வந்தது. கோடைக்காலம் முடிந்து விட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.
இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று ஒரிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில் மெதுவாக வடக்கு திசையில் நடந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும் எனவும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறிப்பாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications