சென்னைவாசிகள் திணறிட்டாங்க.. மீனம்பாக்கம் டூ தேனாம்பேட்டையில் திணறிய மக்கள்..விடிய விடிய கொட்டிய மழை
சென்னை: சென்னையில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.. விடிய விடிய மழை கொட்டியதால், பிரதான சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

மிதமான மழை: இனி அடுத்தடுத்த நாட்களுக்கும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, தற்போது, தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் நேற்று பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.. சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. தி.நகர்அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவான்மியூர், ஆகிய இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.. அதேபோல, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
பிரதான சாலைகள்: நேற்று மாலை பெய்த மழையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் நிறையவே பாதிக்கப்பட்டனர்.. இந்த மழை இரவு முழுவதும் தொடர்ந்தது.. 11 மணிக்கு மேல் பலத்த மழையால், சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானது மீனம்பாக்கம் பகுதிதான்.. காரணம், கத்திப்பாரா பகுதிகளில் மின்சார புதைக்கும் பணி நடந்ததால், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.. இதனால், மீனம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரையிலும், கத்திப்பாராவில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி செல்லக்கூடிய சாலைகளிலும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன..
இன்றும் மழை: கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.. வேளச்சேரியிலும் இதே போன்ற நிலைமைதான் காரணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், நள்ளிரவை தாண்டியே தங்கள் வீடு போய் சேர்ந்தனர்.. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications