அடுத்த 2 மணி நேரம்.. கிரிஷ்ணகிரி டூ குமரி வரை.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது.. ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி முதல் குமரி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கி வெயில் வெளுத்து எடுத்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்ததால், கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ என்ற மக்கள் அச்சமடைந்து இருந்தனர். ஆனால் நல் வாய்ப்பாக அவ்வப்போது மழை கொட்டியது.

கோடை மழை
ஏனென்றால் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வந்தது. ஆனால் கோடைக்காலம் ஆரம்பித்த பிறகு மழை அவ்வப்போது பெய்து வருவதால் பெரிதாக வெயில் தெரியவில்லை. எனினும் சென்னை, வேலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெயில் ஒரு புறம் மழை ஒரு புறம் என மாறி மாறி கிளைமேட் நிலவி வருகிறது.
இன்று தமிழகத்தில் பகலில் பல்வேறு இடங்களில் வெயிலே கொளுத்தி எடுத்தது. நேற்று கோவையின் வால்பாறை, நீலகிரி, சிவகாசி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் கிளைமேட் மாறியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3 +6 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை நெல்லை, குமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
நாளை 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (20-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (21-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெயில் எவ்வளவு இருக்கும்?
* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* 22-04-2025 முதல் 24-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு: இன்று முதல் 24-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 20-04-2025 முதல் 22-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மழை அளவு (செமீ)
* சிவகாசி (விருதுநகர்) 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
* வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
* உபாசி TRF AWS (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 3, எருமைப்பட்டி (நாமக்கல்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
* கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), சண்முகாநதி (தேனி), உசிலம்பட்டி (மதுரை), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), கூடலூர் (தேனி), எழுமலை (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 1 என கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்திருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41° செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications