சென்னை உட்பட 3 மாவட்டங்களில் நள்ளிரவிலும் மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் மெசேஜ்!
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும், இது நீண்ட கால சராசரியில் 106% ஐ விட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றாலும், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கிழக்கு இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் தெற்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் சராசரியை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கு தீபகற்பம் தவிர பெரும்பாலான பகுதிகளில் சராசரி வெப்பநிலை இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட குறைவாகவோ இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தின் முதல் பாதியில் சராசரியை விட 31% குறைவான மழைப்பொழிவு இருந்தபோதிலும், பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளதால் இந்த மாதம் இதுவரை பற்றாக்குறை 9% உபரியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications