அடுத்த 2 மணி நேரம்.. சென்னை டூ குமரி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நெல்லைக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நேற்று மழை பெய்த நிலையில் இன்றும் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை டூ குமரி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்துக்கொண்டு இருக்கும்போதே ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று காலையில் மழை பெய்தது.
குறிப்பாக கடையம், பொட்டல்புதூர் பகுதிகளில் காலை 8 மணியளவில் லேசான மழை பெய்தது.

இதேபோன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இரவும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரியில் கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான் மழை அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று புதன்கிழமை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications