காலையிலேயே 14 மாவட்டங்களுக்கு அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டப்போகுது.. உங்க ஊரும் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் நகரமே குளிர்ந்தது.

சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸ், மணலி, எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் 2.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மதுரவாயல், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் சென்னையில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆகஸ்ட் 18) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, ஆகஸ்ட் 19, 20, 23 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22ஆம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிக மாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சற்று முன்பு சென்னை வானிலை மையம் இன்னொரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications