மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொட்டும் மழை! நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் இன்று அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் லட்சுமி பவ்யா. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி எடுத்தது. இதனால் தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி ஜூன் மாதம் தொடங்கவில்லை.

ஜூன் மாதத்தில் அவ்வப்போது மட்டும் மழை பெய்த நிலையில் இந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்தது. சுமார் 15 நாட்களாக பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் தேயிலை மகசூல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ந்துள்ளன. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications