கொட்டி தீர்க்கும் கனமழை! பாய்ந்தோடும் வெள்ளம்.. கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு 2வது நாளாக விடுமுறை!
நாகர்கோவில்: தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பாயத் தொடங்கியுள்ளது.

மலை கிராமங்களில் சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல சொக்ககிரி மலையில் திடீரென அருவி உருவாகியுள்ளது. மழை காரணமாக மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை. எனவே நேற்று பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். காலாண்டு தேர்வு முடிந்த மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை இன்றும் தொடர்வதால் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்த அளவில் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "கடந்த 4 மாதங்களில் நாடு முழுதும் சராசரியாக ஜூன் மாதத்தில் 91 சதவீதமும், ஜூலையில் 113 சதவீதமும், ஆகஸ்ட்டில், 64 சதவீதமும், செப்டம்பரில், 113 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகா, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சராசரி அளவை விட, 18 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் சராசரி மழையும், வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கூடுதல் மழையும் பெய்துள்ளது" என்று கூறியுள்ளது.
அதேபோல இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications