அடி வெளுக்கும் கனமழை.. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை! சிவகங்கைக்கும் முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சாவூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்திருந்தது. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டிருக்கிறது
இன்றும் அதிகாலை முதல் தஞ்சாவூர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. எனவே இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications