காத்திருக்கும் காவிரி டெல்டா.. கர்நாடகாவில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடக்கம்
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை வறண்டு போனது. கடந்த சில நாட்களாக சொற்ப அளவிலான நீர் வரத்து இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது சாத்தியமற்ற நிலை எனவும் கூறப்படுகிறது.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு பொதுவாக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடிக்கும் அதிகமாக இருந்தது. இதனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடி அளவில்தான் இருந்து வருகிறது. இதனால் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
தற்போதுதான் கர்நாடகா, கேரளாவில் கோடை மழை பெய்தது. குறிப்பாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியாவில் நல்ல மழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்திருந்தது. கேரளாவின் கபிலா ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவின் கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்.
இந்த நிலையில் கேரளாவில் மே 31-ந் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் கர்நாடகாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புயலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான தட்ப வெப்ப நிலையை உருவாக்கி இருக்கிறது என்கின்றனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள். இதனால் காவிரி நதிநீரை கர்நாடகா திறந்துவிடும்; மேட்டூர் அணை தாமதமானாலும் திறக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறது காவிரி டெல்டா.












Click it and Unblock the Notifications