உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னை + 6 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வங்கம் - வங்க தேசம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியிருந்த நிலையில், சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பாம்பன் ஆகிய 2 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்திய வானிலை மையம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 11 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசம் - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது. இதனால் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்க இருக்கிறது.

காற்றுடன் மழைக்கு சான்ஸ்
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் ரெட் அலர்ட்
மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும், இன்று சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால், சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன?
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலே, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. புயல் உருவானது முதல் புயல் உச்சக்கட்ட தீவிரம் அடையும் வரை ஒவ்வொரு படிநிலைகளாக ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் என 11 ஆம் எண் புயல் கூண்டு வரை ஏற்றப்படுகிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் விதமாக இது பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படும். இதுவே இரவு நேரம் என்றால், வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும்.
ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை
* முதலாம் எண் என்றால் லேசான புயல் உருவாகியிருக்கிறது என்பதை குறிப்பிட ஏற்றப்படுவது ஆகும். புயல் உருவாகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது, துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமாக காற்று வீசும் என்று அர்த்தம்.
* இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது என்றால், "புயல் உருவாகி உள்ளது. துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று அர்த்தம்.
* மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், "திடீர் காற்றோடு மழை பெய்யும். புயல் காற்றால், துறைமுகத்துக்கு லேசான அச்சுறுத்தல் இருக்கலாம்" என்று அர்த்தம்.
* 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், "உச்சப்பட்ச ஆபத்து. இது அதி தீவிர புயல் ஆகவும், வானிலை மையத்துடன் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் அர்த்தம். இந்த எச்சரிக்கை கூண்டு என்றால் புயலால் பெரும் சேதம் ஏற்படும்" என்று பொருள் ஆகும்.
இதில் எந்த வகை கூண்டுகள் ஏற்றப்பட வேண்டும் என்பதை இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல் வழங்கும். அதன்படி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும்.












Click it and Unblock the Notifications