சில்லிட வதைக்கும் குளிர்.. பல மாவட்டங்களில் 16 டிகிரிக்கு கீழே குறையும் - டெல்டா வெதர்மேன் அலர்ட்!
சென்னை: வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்த வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படும். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை போன்ற உள் மாவட்டங்களில் வெப்பநிலை 16° செல்சியஸ் அளவிற்கு குறையக்கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
முதல் சுற்று பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் உறைபனி பொழிவு தொடங்கி, கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது.

தற்போது பனிக்காலமும் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நவம்பர் மாதம் நீர் பனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அதன் பின்னர் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக பனிப் பொழிவு முற்றிலும் நின்றது. பல இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், தற்போது பனிப்பொழிவு கொட்டித் தீர்த்து வருகிறது.
டெல்டா வெதர்மேன்
தொடர்ந்து பனி கொட்டுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்லும்போது, முன்னால் செல்லும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத நிலையில், பனிமூட்டம் காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். கடும் குளிரால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பனிப்பொழிவு தொடர்பாக டெல்டா வெதர்மேன் என அழைக்கப்படும் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "முதல் சுற்று பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படும்.
கடும் குளிர்
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவு/ அதிகாலை நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16°© முதல் 18°© செல்சியஸ் அளவிற்கு குறையக்கூடும்.
வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8°© கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் வெப்பநிலை 18-21°© அளவிற்கு குறைந்து காணப்படும்.
விவசாயிகளுக்கான தகவல்:
தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கான வாய்ப்புகள் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் உரமிடுதல், பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு, நடவு/தெளிப்பு போன்ற அனைத்தையும் திட்டமிடலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications