கை விட்ட காவிரி..கைகொடுத்த வருண பகவான்.. கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பம் தகித்து வந்த நிலையில் அதை தணிக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் திரும்ப வந்து விட்டதோ என்று நினைக்கும் வகையில் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பம் தகித்தது. ஆடி மாதத்தில் அனல் காற்று வீசியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழை பெய்தால் மட்டுமே வெப்பம் தணியும் என்று வருண பகவானை வேண்டி வந்தனர் பொதுமக்கள். அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கவே மழைக்காக வேண்டிக்கொண்டனர் விவசாயிகள்.

இதனிடையே வானிலை ஆய்வு வெளியிட்ட அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போல பல ஊர்களில் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. திருவாரூர், நன்னிலம், சண்ணாநல்லூர், மாங்குடி, பூந்தோட்டம், பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் நனைந்துக்கொண்டும், குடைபிடித்தும் சென்றனர். அண்ணா சிலை, கீழவாசல் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.மேலும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வரும் நிலையில் தற்போது மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி நகரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தேனி பழைய பேருந்து நிலைய இருசக்கர கட்டண வாகன நிறுத்துமிடத்திற்குள் மழைநீர் குளம் போல் தேங்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் சைலன்ஸர்கள் மற்றும் என்ஜின்களுக்குள் நீர் புகுந்து பழுதடைந்தன. இதனால் பலர் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சுற்றுப்பகுதி மெக்கானிக்குகள் அங்கு முகாமிட்டு வாகனங்களை பழுது நீக்கி கொடுத்தனர்.
புதுக்கோட்டை நகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது அனல் காற்று வீசிய நிலையில் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. கார்மேகம் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டை பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் நீரில் அடித்து செல்லாமல் இருக்க வியாபாரிகள் போராடினர். கனமழையால் பொதுமக்கள் கூட்டம் குறைந்ததால் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிச்சென்றனர்.

புதுக்கோட்டையில் மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த காற்றால் ஆயுதப்படை மைதானம், சாந்தனாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
12.08.2023 முதல் 17.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications