3 நாளைக்கு ரெஸ்ட் விட்ட வெயில்.. ஆனால் சம்பவம் செய்யப் போகும் மழை! இன்று ’இந்த’ மாவட்டங்களில் சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுத்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து டிசம்பர் ஜனவரி மாதங்களில் மழைக்கு விடை கொடுத்து உறை பனி ஆரம்பித்தது.

அதே நேரத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பகல் நேரங்களில் கடுமையான வெயில், இரவு நேரத்தில் பனிப்பொழிவு என மாறிய காலநிலையால் மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.
குறிப்பாக ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு வெப்பநிலை பதிவானது. கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்து இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதற்கிடையே வெயிலுக்கு விடை கொடுக்கும் விதமாக வளிமண்டல சுழற்சி உருவானது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. பெரிய அளவு மழை இல்லை என்றாலும் சில மாவட்டங்களில் வெயிலில் தாக்கத்தை குறைப்பது போல மழை இருந்தது. மார்ச் 11 தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் 13ம் தேதியே மழை விடை பெற்றது.
இந்த நிலையில் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக் கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக் கூடும்.
மழை அளவை பொருத்தவரை நேற்று காலை 8:30 மணி வரை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 5 சென்டிமீட்டர், திருச்சி நீலகிரி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 சென்டிமீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
இன்று தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரப் பகுதிகளில் மழை பெய்யலாம். குறிப்பாக நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லையின் ஒரு சில பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. " என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications