2 சம்பவத்தை விடுங்க.. 3வதாக ஒரு சம்பவம் நடக்குது.. அதுதான் சிக்கலே! சென்னையை நடுங்க வைக்கும் புயல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் புயல் வரும் 4ம் தேதிக்கு முன்பாக அதி தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மையமாக வலிமை பெற்றுள்ளது. இந்த தாழ்வு மையம் வலிமை அடைந்து வருகிறது.

டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.
இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 4ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு சம்பவங்கள்: இந்த புயல் சென்னை அல்லது தெற்கு ஆந்திர பிரதேசம் இடையே கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் புயலுக்கு இரண்டு விஷயங்கள் சாதகமாக மாறிவிட்டது. 3வது விஷயம் ஒன்று தற்போது புயலுக்கு சாதகமாகிக்கொண்டு இருக்கிறது
3 விஷயங்கள்; பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் இல்லை என்றாலும் கடலில் உள்ள வெப்பம் 28 டிகிரியாக உள்ளதால் புயலுக்கு சூழ்நிலை சரியாக உள்ளது.
அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும். ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன. இப்போதும் கூட இந்த புயல் சின்னம் போர்ட் பிளேயருக்கு கீழே உள்ளதால் கண்டிப்பாக இது புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும். வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் இல்லை என்பதால் குளிர்ந்த காற்று வீச தொடங்கி உள்ளது. இப்போது உள்ள குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது என்பதால் கண்டிப்பாக மூன்றாவது விஷயமும் புயலுக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. .
இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் தற்போது உள்ள புயலுக்கு சாதகமாக உள்ளது. இதனால் அந்த புயல் அதிதீவிர புயலாக மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications