வங்க கடல்+அரபிக்கடலில் ஒரே நேரத்தில் சம்பவம்! ஹெவி மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
புவனேஸ்வர்: தென்னிந்தியாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதேபோல இது உருவாகும் அதே நேரத்தில் அரபிக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது.
இப்படி இருக்கையில் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் அக்.3ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 3-4 நாட்களுக்கு ஒடிசாவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒடிசா மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதேபோல ஆறு, அணைகளில் நீர் மட்டம் உயர்வு குறித்து மாவட்ட நிர்வாக மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடலிலும் இதேபோன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications