ஒரே நாளில் வெடித்து கொட்டும் மழை! தனித்தீவாகி இன்னொரு சென்னையான திருச்செந்தூர்!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அதிக மழை பெய்து வருவதால் தனித்தீவாக காட்சியளிக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதலே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நிறைய கன்மாய்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் வந்துவிட்டது. அது போல் தாமிரபரணி, பாபநாசம், மணிமுத்தாறு, உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து வருகிறது. திருச்செந்தூரை எடுத்துக் கொண்டால் அங்கு 68 செ.மீ. மழை பெய்துள்ளது.
சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வருகிறது. திருச்செந்தூரில் சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தனித்தீவாக காட்சியளிக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.
ஊர் முழுக்க தண்ணீராக காட்சியளிக்கும் நிலையில் திருச்செந்தூரில் மின்சாரமும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த சூழல் அப்படியே சென்னை பெருவெள்ளத்தை கண்களில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சென்னையிலும் மிக்ஜாம் புயலின் போது தண்ணீர் தேங்கி குடிக்க தண்ணீர் இல்லாமல் கரண்ட் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பால் வாங்க முடியாமலும் உணவு பொருட்களை வாங்க முடியாமலும் அவதிப்படுகிறார்கள். தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

நீடித்து வரும் கனமழை காரணமாக நேற்றைய தினமே பேரிடர் மீட்பு குழுவினர் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். அது போல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்,. மின் வாரிய பணியாளர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி- கேரளா இடையே போக்குவரத்தானது துண்டிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications