இன்று இரவு முதல் சென்னை + பல மாவட்டங்களில் மழை கொட்டக் காத்திருக்கு.. வெதர்மேன் விடுத்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழல் உள்ளது, சென்னையிலும் நல்ல மழைக்கான வாய்ப்புகள் உள்ளன என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு முதல் காலை வரை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

வட கடலோர தமிழ்நாடு - KTCC மண்டலம் (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு & சென்னை), புதுச்சேரி மற்றும் கடலூர் - தற்போது உள் மாவட்டங்களில் குவிந்துள்ள காற்று இன்றிரவுக்குள் கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு- காலை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
தெற்கு தமிழ்நாடு - தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி
மேற்கு உள்துறை தமிழ்நாடு - சேலம், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல்
டெல்டா மண்டலம் - திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்
வடக்கு உள் தமிழ்நாடு - திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி
மேலே உள்ள அனைத்து இடங்களிலும் அடுத்த 2 நாட்களில் குறைந்தபட்சம் ஒரு மழை இருக்கும்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்தாலும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேவேளையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏனாம் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதாவரி ஆற்றின் கரையோரம் உள்ள புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் பாலயோகி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் குளிக்கவும், வேடிக்கை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக வலுப்பெறக்கூடும். பிறகு, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், சற்று மேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications