அடுத்த 2 மணி நேரம்.. தஞ்சை முதல் விருதுநகர் வரை.. 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை வண்ணாரப்பேட்டை, பேட்டை, ஜங்க்ஷன், கல்லூர், முக்கூடல், பாபநாசம், அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதேபோன்று தென்காசி மாவட்டத்தில் இன்று மதியம் 2 மணியளவில் கனமழை கொட்டியது. தென்காசி, ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களாக பெரிதாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிக்குள் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்படுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மிதமான மழை தொடரும்.
இன்று கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19-11-2024 முதல் 23-11-2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications