அடுத்த 3 மணி நேரம் 10 மாவட்டங்களில் பிச்சு உதறும் மழை! எந்த ஊர்களில் சம்பவம் இருக்கு- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு இதமாகக் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பம் அதிகரிக்கும் நிலையில், இந்த மழை குளிர்ச்சி தருவதாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே பல இடங்களில் வெப்பம் உச்சத்திற்குப் போய் இருக்கிறது. பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வெளியே கூடப் போக முடியாத சூழலே பொதுமக்களுக்கு இருக்கிறது.

பரவலாக மழை
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ஏப்ரல் மாதம் பெய்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன் பிறகும் கூட ஓரிரு இடங்களில் மழை தொடர்ந்து பெய்தே வருகிறது. கோடை வெயில் ஒரு பக்கம் படுத்தி எடுத்து வரும் சூழலில், அதை சற்றே குறைக்க இந்த மழை உதவுகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்
இரவு 7 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நெல்லையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மழை காரணமாகச் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும் சாலைகளிலும் நீர் தேங்க வாய்ப்பு இருப்பதால் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் (ஏப்ரல் 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 19 முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (17-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (18-04-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications