அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. புயலை முன்னிட்டு சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு!
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று (டிச.2) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் பின்னர் அது புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் வலுவிழந்த மரம், விளம்பர பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 630கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இன்று மாலைக்குள் 400 கி.மீ தொலைவுக்கு வரும். இதனால் இன்று முதல் கடல் கொந்தளிப்பாக காணப்படும். புயல் உருவாகி 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் 80 கி.மீ தொலைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிக்ஜம் புயல்.. சென்னைக்கு ஆரம்பமே இப்படியா.. முதல் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
4-ம் தேதி சென்னையில் இருந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். சென்னை வழியாக சென்று ஆந்திரா கடலில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5-ம் தேதி ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சென்னைக்கு அருகில் வரும் போது 3,4-ம் தேதி அங்கு கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று (02.12.2023) மிக்ஜாம் புயலை (வடகிழக்கு பருவமழை) முன்னிட்டு சென்னை பெருநகர காவல் வரம்பில் தற்போதைய நிலவரம்.
முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் : புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் -வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்பில் அகற்றப்படும் முக்கிய நீர் தேங்கியுள்ள பகுதிகள்: இல்லை
சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTS) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:
நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:
1. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல் எதுவும் இல்லை என்றும் இதுவரை பெய்த கனமழையால் எந்த இறப்புகளும் பதிவாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்குதல் மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விவரம் இல்லை என்றும் சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications