தென் தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் மேகங்கள்! மீண்டும் ராமநாதபுரம்தான் டார்கெட்
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதே நேரம் இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இதனால் வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை தீவிரமெடுத்துள்ளது. குறிப்பாக நேற்று பெய்ததை போல இன்றும் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாயப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு பருவமழைகள் போதுமான அளவுக்கு மழையை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டும் முதலில் தொடங்கும் பருவமழை இதுதான். இந்த ஆண்டும் ஜூலை மாதம் இது தொடங்கியது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பருவமழை பெய்திருந்தது. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு என கொங்கு பெல்ட்டில் அதிக மழை பதிவாகியிருந்தது. தவிர தேனி தொடங்கி கன்னியாகுமரி வரையும் நல்ல மழை பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய இது, சென்னை தொடங்கி வங்கக்கடல் ஓரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்தது. சென்னையில் அதிக அளவு மழை பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் மிக மிக அதிகனமழை பெய்திருந்தது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 44 செ.மீ அளவுக்கு மழை இருந்தது. 20 செ.மீ அளவுக்கு பெய்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.
கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் பல்வெறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் 43 செ.மீ., தங்கச்சி மடம் பகுதியில் 33.8 செ.மீ., பாம்பனில் 28 செ.மீ., மண்டபம் 27.1செ.மீ., ராமநாதபுரம் 12.5 செ.மீ., கடலாடி 7.3 செ.மீ., வாலிநோக்கம் 6.5 செ.மீ., கமுதி 5 செ.மீ., என கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றும் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை ரெய்ன்ஸ் எனும் தனியார் வானிலை அமைப்பானது, மழை மேகங்கள் வடகிழக்கு பகுதியிலிருந்து தென்மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் ராமநாதபுரத்தில் நேற்றை போலவே மழை பெய்யும் எனவும் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று பெய்த மழை காரணமாக வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இப்படி இருக்கையில் இன்றும் கனமழை பெய்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்று ராமநாதபுரம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications