சென்னையில் 104 டிகிரி வெயில்.. கன்னியாகுமரியில் வெள்ளம்! மாறி மாறி ஆட்டம் காட்டும் வானிலை!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்திருந்த நிலையில், தற்போது வெயில் தொடங்கியுள்ளது. சென்னையில் வெயில் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம் குமரியில் மழை தீவிரமடைந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. “நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 0830 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு -தென்மேற்கேயும், மேற்கு வங்காளம் - சாகர் ஜலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு- தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (25.05.2024) மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (26.05.2024) காலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை (26.05.2024) நள்ளிரவு வங்க தேச- கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்க கூடும்.புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று தமிழகத்தில் வெகுசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 31ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்க, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று உயரக்கூடும்.
நாளை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 27 முதல் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்த அளவில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39'-40' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 30 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது சென்னையில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கன்னியாகுமரியில் தற்போது கனமழை வெளுத்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அக்கரை, பரப்புவிளை, உதிரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழையாற்றின் குறுக்கே அமைந்துள்ள சோழன்திட்டு அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இப்படியாக வெயிலும் மழையும் மாறி மாறி வருவதால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications