கர்நாடகாவை கொதிக்க வைக்கும் வெயில்.. பிப்ரவரியிலேயே தொடங்கிய கோடை காலம்..சுட்டெரிக்குதய்யா சூரியன்!
பெங்களூர்: கர்நாடகாவில் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.
நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் சற்று விலக தொடங்கி இருக்கிறது. இன்னமும் அதிகாலையில் பனி தாக்கம் இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பிப்ரவரி மாதத்திலேயே கோடை காலம் தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் பகலில் மிக கடுமையான வெயிலும் இரவில் பனி பொழிவும் இருந்து வருகிறது.

பெங்களூர் மாநகரில் நேற்று 93 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. கர்நாடகாவில் மிக அதிகபட்சமாக கலபுரகியில் பிப்ரவரியிலேயே 98 டிகிரி வெயில் உச்சத்தைத் தொட்டது. கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகமாக இருக்கும் என்கிறது வானிலை மையம்.
பெங்களூர் நகரில் வரும் 12-ந் தேதி முதல் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்குமாம். தற்போதைய இயல்பு வெயிலின் பதிவு 3 டிகிரி வரை கூடுதலாக இருக்கக் கூடுமாம். பெங்களூரில் இனி வரும் நாட்களில் சராசரி வெயில் அளவு 96 டிகிரியாக இருக்கும் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கர்நாடகாவில் நேற்று மைசூரில் 93.20 டிகிரி, மண்டியாவில் 96.08 டிகிரி, சிவமொக்காவில் 96.08 டிகிரி, மங்களூரில் 94.01 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது.
தற்போது கடுமையான வெயிலும் இரவில் கடும் பனிப் பொழிவும் இருப்பதால் உடல்நலன் பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. திடீர் காலநிலை மாற்றங்களால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகமாகுமாம். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications