வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் நடக்கும் வானிலை மாற்றம்! வெதர்மேன் அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடையும் என்றும் இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என தென் மாவட்டங்களில் கனமழை பதிவாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கிறது.

தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், மாநிலம் முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும். இதன் மூலம் மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிதமான அளவில் மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்யும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நெல்லை மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மிக அதிகனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.
புயலை பொறுத்தவரை, மிகவும் சிக்கலான அமைப்பாக இருக்கிறது. முன் கணிக்க முடியாதபடி இருக்கிறது. அடுத்த 7 நாட்களில் இந்த அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். எனவே புயலின் தன்மையை அறிக காத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று வரை சராசரியாக 294.7 மி.மீ அளவக்கு மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தின் இயல்பு மழை அளவு 311.9 மி.மீ. அந்த வகையில், இயல்பை விட மழை 6% குறைவாக பெய்திருக்கிறது. மொத்தமாக 11 மாவட்டங்களில்தான் மழை அதிகமாக பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 669.3 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பை விட 96% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications