வடகிழக்கு பருவமழை எப்போது? வடதமிழக மாவட்டங்களுக்கு ‛வார்னிங்’.. பாலச்சந்திரன் கூறிய முக்கிய தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும். இந்த முறை வடதழிழக மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தென்தமிழக மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை குறித்து அவர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பாலச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு 14 சதவீதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. மாவட்ட அளவில் எடுத்து கொண்டால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நெல்லையில் இயல்பை விட மிக அதிகமாக பெய்துள்ளது. 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும் மழை பெய்துள்ளது.
அதேபோல் தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை என்பது இயல்பை விட 74 சதவீதம் வரை அதிகம் பெய்தது. ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 43 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். வடகிழக்கு பருவமழை தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா, ஆந்திராவை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications