15 கிமீ வேகம்.. தமிழகத்தை நெருங்கும் பெங்கல் புயல்.. இப்போது எங்கே இருக்கு தெரியுமா?
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் அந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இரவு 9 மணி நிலவரப்படி அந்த புயல் எங்கு உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை சென்னை, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், புயல் காரணமாக கடற்கரையோர பகுதியில் குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று மாலை 6 மணிக்கு புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அந்த புயல் நகர்ந்து வந்தது. இந்நிலையில் தான் இரவு 9 மணிக்கு ஃபெங்கல் புயலின் நிலை என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஃபெங்கல் புயல் நாகைக்கு கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. அப்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுகிறது.
சென்னை, புதுச்சேரியை பொறுத்தமட்டில் கடல் தற்போது சீற்றமாக உள்ளது. அதோடு நாளை கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications