குறுக்கே வந்த அந்த 2 விஷயங்கள்! வலுவிழந்த டிட்வா புயல்! சென்னைக்கு மழை இல்லாதது ஏன்? வெதர்மேன்
சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் அதி கனமழையே இல்லாமல் போனதற்கு காரணம் என்ன என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வறண்ட காற்றாலும், ஈரக்காற்றின் முறிவு காரணமாகவும் டிட்வா புயலானது காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது. இது மயிலாடுதுறைக்கு 140- 220 மி.மீ. மழையை கொடுத்துள்ளது.

அது போல் டெல்டா மாவட்டத்தில் தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் எந்த மேகக் கூட்டங்களையும் உருவாக்காமல் வெறும் கூடாகவே காற்றழுத்தம் நிலவும். இன்றைய தினம் பிற்பகுதியில் வடதமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அருகே மேகக் கூட்டங்கள் உருவாகும். சென்னைக்கு அருகே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவண்ணாமலை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் தலா, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான டிட்வா புயல், நேற்று காலை நிலவரப்படி இலங்கை கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று அதிகனமழை பெய்தது. இதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் நேற்று மிக கனமழை பெய்தது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications