உச்சத்தில் சூரியன்! நகரவே நகராது.. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு வெயிலுக்கான மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று தொடங்கி மே 3ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அதேபோல வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. வெப்ப நிலையை பொறுத்த அளவில் அதிகபட்சமாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக வெப்பமம் பதிவாகியிருந்தது. ஏனைய தமிழக சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்சமாக 7 இடங்களில் 40.0° செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியிருந்தது. அதாவது ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், தர்மபுரியில் 41.2° செல்சியஸ், வேலூரில் 41.1° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 40.1° செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியிருந்தது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° -37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -30° செல்சியஸ் பதிவாகியிருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.6° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் பதிவாகியிருந்தது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த ஏழு தினங்களை பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.
இன்று முதல் மே 1ம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 3 முதல் 5ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில்,
இன்று தொடங்கி மே 3ம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இன்று தொடங்கி அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
மே 2 மற்றும் 3ம் தேதி வரை 2 தினங்களுக்கு ஏனைய தமிழக வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் என வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் வருசில இடங்களில் 39-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
காற்றின் ஈரப்பதத்தை பொறுத்த அளவில், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
மே 2 மற்றும் 3ம் தேதிகளில் இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications