செப்.22ல் ஜெ.வுக்கு என்ன நடந்தது.. அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன.. விசாரணை கோரும் மைத்ரேயன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
டெல்லி: மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மைத்ரேயன் பேசியதாவது:
ஜெயலலிதாவிற்கு செப்டிசிமியா உள்ளதால் அவரை யாரும் பார்க்கக் கூடாது என்று அப்பல்லோ மருத்துவமனையில் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த நோயே இருந்தாலும் கூட ஒரு சில மணித் துளிகள் நோயாளியை பார்க்க அனைத்து மருத்துவமனையிலும் அனுமதி உண்டு.
அப்பல்லோவில் இருந்த 75 நாட்கள் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. எல்லாம் நன்றாக இருப்பதாகவே கூறிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று டிசம்பர் 4ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதில் பல்வேறு குளறுபடிகளும் சந்தேகங்களும் உள்ளன. இந்த சந்தேகத்தை போக்குவதுதான் ஜெயலலிதாவிற்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே, இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ள குறைபாடுகள் என்ன? செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது? அதற்கு முன்பாக ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்தெல்லாம் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.