ஜெ அப்பீல் வழக்கில் பவானி சிங் ஆஜரானதே தவறு: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வக்கீல் கருத்து
டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானி சிங்கிற்கு அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.என்.ராவ் தெரிவித்தார்.
இருப்பினும் பவானிசிங் நியமனத்திற்கு அரசுத் தரப்பு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் தெரிவிக்கவே வழக்கு விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடர்ந்து ஆஜராகி வருவதை ரத்து செய்யக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் அப்பீல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு கர்நாடக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும்" என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது கர்நாடக அரசு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மதன்லோகுர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கர்நாடக அரசு வழக்கறிஞர் விளக்கம்
விசாரணையின் போது கர்நாடக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் எம்.என்.ராவ் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானி சிங்கிற்கு அங்கீகாரம் இல்லை என்றும், உயர் நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜராக கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்பழகன் வழக்கறிஞர்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் அந்தியார்ஜுனா வாதம் செய்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திவ் ஜெயலலிதா மேல்முறையீடு செய்திருந்தார்.
முகாந்திரம் இல்லை
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராக அனுமதியில்லை என்றும், உயர்நீதிமன்றத்தில் ஆஜராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்று அன்பழகன் சார்பில் ஆஜரான அந்தியர்ஜுனா வாதிட்டார். மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜராக எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு ஆதரவு
குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்படுவதாகவும் அந்தியார்ஜுனா புகார் தெரிவித்தார். மேலும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவால் அபராதம் விதிக்கப்பட்டவர் பவானி சிங் என்றும் குற்றம் சாட்டினார்.
குற்றவாளி கேட்டது தவறு
அரசு வக்கீலாக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என குற்றவாளிகள் கோரியது தவறு என்றும் அரசு தரப்பில் குறிப்பிட்ட ஒருவரை நியமிக்க குற்றவாளி கோருவது சட்டவிரோதம் என வாதிட்டார்.
ஜெ. தரப்பு வாதம்
இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன், சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான பவானிசிங்கின் நிலைப்பாடு பற்றி எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பவில்லை என்று தெரிவித்தார். பவானிசிங் நியமனத்தில் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான டிவிஷன் வழக்கு விசாரணையை, ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தீர்ப்பு எப்போது
அன்பழகன் வழக்கின் தீர்ப்பு விபரம் தெரியவந்த பின்னர்தான் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பினை நீதிபதி குமாரசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது