உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்
சென்னை: தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, நகைக்கடைகளில் கூட்டம் மட்டும் குறையவதில்லை.. ஆனால், சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய பயம் பரவிக்கிடக்கிறது. "அதிகமான நகை வாங்கினால் இன்கம் டேக்ஸ்ல இருந்து நோட்டீஸ் வருமா?" என்பதுதான் அந்த நடுக்கம். வாட்ஸ்அப்பில் வரும் விதவிதமான வதந்திகள் இந்த பயத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது. உண்மையில் வருமான வரித்துறை உங்கள் வீட்டுக்கதவை எப்போது தட்டும்? நீங்கள் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? இதோ ஒரு தெளிவான விளக்கம்.
தங்கம் வாங்குதிலும், தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதிலும், முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தங்கம் வாங்குவது ஒன்றும் சட்டவிரோதமான காரியம் கிடையாது. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில், முறையாக கணக்கு காட்டி வரி கட்டியிருந்தால், நீங்கள் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வாங்கலாம்.

தங்கம் நகை வாங்குவோருக்கு
ஆனால், பிரச்சனை எங்கே வருகிறது என்றால், நம்முடைய வருமானத்திற்கும் நாம் வாங்கும் தங்கத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்போதுதான். உதாரணமாக, ஒருவரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் என்று கணக்கு காட்டுகிறார், ஆனால் திடீரென ஒரே நாளில் பத்து லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்குகிறார் என்றால், அந்தப் பணம் ஏது என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
இந்திய வருமான வரி சட்டப்படி, வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு சில அளவுகோல்கள் உள்ளன. ஒரு திருமணமான பெண் 500 கிராம் அதாவது சுமார் 62 சவரன் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் வீட்டு பீரோவில் தங்கம்
கல்யாணமாகாத பெண்கள் 250 கிராம் அதாவது சுமார் 31 சவரன் வரையிலும், ஆண்கள் 100 கிராம் சுமார் 12 சவரன் வரையிலும் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. இந்த அளவிற்குள் உங்களிடம் தங்கம் இருந்தால், வருமான வரித்துறை சோதனையின்போது அதற்கான ஆதாரங்களை கேட்க மாட்டார்கள். ஆனால், இதற்கு மேல் தங்கம் இருந்தால், அது எப்படி வந்தது என்பதற்கான ரசீது அல்லது ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டியிருக்கும்.
பலர் செய்யும் மிஸ்டேக் என்னவென்றால், பழைய நகைகளை விற்றுப் புதிய நகைகளை வாங்கும்போதோ அல்லது பணமாக கொடுத்து தங்கம் வாங்கும்போதோ முறையான ரசீதுகளை வாங்குவதில்லை. இந்த ரசீகளை எப்போதுமே பத்திரமாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.. இவையெல்லாம் எந்த நேரத்திலும் உதவக்கூடியவை.
65 சவரன் நகை - பான் கார்டு கட்டாயம்
2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் கார்டு கட்டாயம் என்பது விதியாகும்,. இதை தவிர்க்க சிலர் பிரித்து பிரித்து வாங்குவார்கள். இதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்தும். மேலும் குடும்பப் பாரம்பரியமாக வந்த நகைகள் அல்லது சீர் வரிசையாக வந்த நகைகளுக்கு வரி விலக்கு உண்டு, ஆனால் அதையும் நிரூபிக்க வேண்டிய சூழல் வரலாம்.
எனவே, நீங்கள் முறையாகப் பணம் சம்பாதித்து, அதற்கு வரி கட்டி, நகைக்கடையில் சரியான ரசீது பெற்று தங்கம் வாங்கினால் பயப்படத் தேவையே இல்லை. தேவையற்ற வதந்திகளை நம்பி குழப்பமடையமும் வேண்டாம். அதே சமயம், பெரிய அளவில் முதலீடு செய்யும்போது தணிக்கையாளரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது. தங்கம் வாங்குவது உங்கள் உரிமை, ஆனால் அதற்கான கணக்கைச் சரியாக வைத்திருந்தாலே போதும் என்கிறார்கள் நிபுணர்கள்..!!












Click it and Unblock the Notifications