முஸ்லீம்களுக்கு வேலை இல்லை: எம்.பி.ஏ. பட்டதாரிக்கு இமெயில் அனுப்பிய மும்பை கம்பெனி
மும்பை: மும்பையைச் சேர்ந்த நகை ஏற்றுமதி நிறுவனம் தாங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்போம் என்று கூறி வேலை கேட்டு விண்ணப்பித்த இஸ்லாமியருக்கு இமெயில் அனுப்பியுள்ளது.
மும்பையில் உள்ள ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நகை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்காக எம்.பி.ஏ. பட்டதாரியான ஜெஷான் அலி கான், அவரது நண்பர்கள் முகுந்த் மணி மற்றும் ஓம்கர் பான்சோடே ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் அனுப்பிய 15 நிமிடங்கள் கழித்து அந்நிறுவனம் ஜெஷானுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. அந்த இமெயிலில், நாங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெஷானின் நண்பர்களை நேர்காணலுக்கு வருமாறு அந்நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இது குறித்து ஜெஷான் கூறுகையில்,
இமெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்தேன். இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். என்னுடன் விண்ணப்பித்த என் நண்பர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. என் பெயரில் கான் இருப்பதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. என்னை முஸ்லீம் என்பதால் நிராகரித்த நிறுவனத்தில் சேரப் போவது இல்லை என எனது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
ஜெஷானுக்கு இமெயில் அனுப்பிய ஹெச்ஆர் ட்ரெய்னீயை சஸ்பெண்ட் செய்துள்ள நிறுவனம் இது தவறுதலாக நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.