சிகிச்சை அளித்த 600 டாக்டர்கள், நர்ஸ்களை குண்டு வீசிக் கொன்ற சிரிய படைகள்!
நியூயார்க் : சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் இயக்குனர் ஏரின் ஹல்கர் கூறும் போது "போரின் போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம். ஆனால் சிரியாவின் அரசுப்படைகள் எதைப்பற்றியும் கவலைபடாமல் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்ற செவிலியர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது" என தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இன்று வரை சுமார் 15,000 மருத்துவர்களும், பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களும் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தொடர்ந்து அங்கு வசித்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளைக் காப்பாற்ற சிகிச்சை அளிக்கும் போது கூட கொல்லப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.