இலங்கையில் சீனர் கைது- ராஜபக்சே ஏற்பாட்டில் சிறிசேனவை கொல்ல பதுங்கியிருந்தாரா? என விசாரணை
இலங்கையில் சந்தேகத்துக்குரிய சீனா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவை கொல்ல சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்பு: இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய பதுங்கியிருந்த சீன நாட்டவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் சூதாட்ட விடுதி ஒன்றில் வேலை பார்ப்பது போல் பதுங்கியிருந்த சந்தேகத்துக்குரிய சீன நாட்டவர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபர் அதிபர் சிறிசேன உள்ளிட்ட விவிஐபிக்கள் பகுதிகளில் அதிகமாக நடமாடியது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
அவர் சிறிசேனவுக்கு எதிரான ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலருடனும் தொடர்பில் இருந்தார் என்பதை அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிழல் உலக குழுவைச் சேர்ந்த அந்த சீன நாட்டவர் குறிபார்த்து சுடுவதில் மிகவும் கை தேர்ந்தவராம்.
இதனால் ராஜபக்சே ஏற்பாட்டில் சிறிசேனவை கொலை செய்ய சீனாவில் இருந்து அந்த நபர் அழைத்துவரப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக 'எந்த நேரத்திலும்' ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவரகள் சூசகமாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் சீன நாட்டவர் ஒருவர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.