அட ஆண்டவா.. முருகனுக்குப் பதில் மாரியம்மனுக்கு காவடி எடுத்த அமைச்சர்கள்!
கரூர்: முருகனுக்கு பதிலாக மாரியம்மனுக்கு இளநீர் காவடி எடுத்து அமைச்சர்கள் பக்தர்களையும், ஆன்மீகாவாதிகளையும் ரொம்பவே கன்பியூஸ் செய்து விட்டார்கள்.
அதிமுகவில் எல்லோருமே "அம்மா கோண்டு"களாக உள்ளனர். ஒவ்வொரு அமைச்சரும், "அம்மா"விடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வதைத்து, வறுத்து வருவதை ஆங்காங்கே காண முடிகிறது.
முருகனுக்கு நேர்த்திக்கடனாக காவடி எடுப்பது காலம் காலமாக தமிழர்கள் செய்து வந்த ஒரு நேர்த்திக்கடன். ஆனால் இன்று (17-04-15) கரூர் மாவட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மற்றும் திரளான தொண்டர்களும் பயங்கரமாக குழப்பி விட்டனர் பக்தர்களை.
அமராவதி ஆற்றிலிருந்து
அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி எடுத்து வந்து ஏதோ ஒரு முருகன் கோயிலுக்கு செல்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென டேக் டைவர்ஷன் ஆகி கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.
முருகனுக்குத்தானே காவடி எடுப்பார்கள்
வழக்கமாக முருகனுக்குத்தான் காவடி எடுப்பது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு விரோதமாக அதிமுகவினர் நடந்ததற்கு, விஷ்வ இந்து பரிசத், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் என பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அம்மாவுக்காக அம்மனை களங்கப்படுத்துவதா!
முருகனுக்குத் தான் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல வகை காவடிகளை எடுப்பது வழக்கம் ஆனால் வழக்கத்திற்கு மாறாக "அம்மா அம்மா" என அம்மனையும், முருகனையும் இழிவு படுத்தும் விதமாக இந்த செயல் விளங்குவதாக பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதுக்குன்னே தெரியலையே
அதேசமயம், உண்மையிலேயே இந்த காவடி "அம்மா"வுக்காகவா அல்லது வேறு காரணத்திற்காவா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ஊர் அருகே தளவாபாளையம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 26 பயணிகள் உயிர் தப்பினர்.
அதுக்காகவா....!
ஒரு வேளை அதற்கு பரிகாரம் செய்வதற்காக இப்படி மாற்றி காவடி எடுத்தார்களா அல்லது போக்குவரத்து துறை ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என இப்படிக் காவடி எடுத்தார்களா என்று கேள்விகள் எழுந்துள்ளனவாம்.
இளநீருக்கு 500.. உருண்டா ரூ. 2000!
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, இளநீர் காவடி எடுத்தவர்களுக்கு ரூ 500ம், அங்கப்பிரதட்சணம் செய்தவர்களுக்கு ரூ 2 ஆயிரமும் வழங்கப்பட்டது.
சரமாரியாக போட்டோ எடுக்க அனுமதி
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த மாரியம்மன் திருக்கோயிலில் கோயில் கர்ப்பகிரகத்தை இது வரை எந்த தொலைக்காட்சியும், நாளிதழ்களில் வேலை பார்க்கும் புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் எடுத்ததில்லை. எடுக்கவும் கூடாது என்று அங்கே போர்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வளைத்து வளைத்துப் படம் எடுக்க அனுமதித்தனர்.
அம்மனுக்குக் களங்கம்
"அம்மா"வை காப்பாற்ற நினைத்து அம்மனை களங்கப்படுத்தும் செயலாக இந்த செயல் இருந்ததாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா வாழ்க என கோஷம் பாட மாரியம்மன் கோயிலை அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கப்பிரதட்சணம் செய்தார்.
அம்மன் கோவிலா.. இல்லை அம்மா கோவிலா
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் கோயிலா ? இல்லை அம்மா கோயிலா என்று குமுறலுடன் சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியினால் கரூர் ஐந்து ரோட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது.