அய்.. அயயே.. இது என்ன கலாட்டா????!!!
சென்னை: "அம்மா" ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. என்பதற்கு இது ஒரு தம்மாத்தூண்டு உதாரணம்.
திருமணமான, சுமங்கலிப் பெண்கள் மட்டுமே நடத்தக் கூடிய விளக்கு பூஜையை ஆண்களை வைத்து நடத்தி புதிய வரலாறே படைத்துள்ளனர் அதிமுகவினர். எல்லாம் கோவையில் நடந்த கூத்துதான்.
அம்மா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் அரியணை ஏற வேண்டும் (இந்த மூன்றுமே அதிமுகவினரின் வழிபாடுகளில் Default கோரி்க்கைகள் ஆகும்). ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோவில்களில் பூஜைகள், யாகங்கள் களை கட்டியுள்ளன.
கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களே பயந்து போகும் அளவுக்கு அதிமுகவினரின் பக்தி முத்திப் போயுள்ளது. இந்த முத்தலில் அவர்கள் சில "குண்டாங்குறை குழப்பங்களையும்" அரங்கேற்றத் தவறுவதில்லை.
இப்படித்தான் கரூரில், முருகனுக்கு எடுக்க வேண்டிய காவடியை, மாரியம்மனுக்கு எடுத்து அசத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான அதிமுகவினர்.
இந்த நிலையில் கோவையில் ஒரு காமெடி கலாட்டா நடந்தேறியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கோவை கோனியம்மன் கோயிலில் 16ம் தேதியன்று மாலை 6.30க்கு 670 பெண்கள் கலந்துகொள்ளும் விளக்கு பூஜை நடைபெறும் என்று விளம்பரம் செய்திருந்தார் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், மேயருமான கணபதி ராஜ்குமார்.
ஆனால் கோவிலில் கூட்டத்தையே காணோம். விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே பெண்களைக் காண முடிந்தது. இதனால் மேயர் டென்ஷனாகி விட்டார். தனது ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டார். ஆள் பிடிக்கப் போயிருக்காங்கண்ணே, வந்துருவாங்க என்று அவர்கள் மேயரை அமைதிப்படுத்தினர்.
ஆனாலும் பெண்கள் வந்தபாடில்லை. நல்ல நேரம் வேறு கடந்து கொண்டிருந்தது. பார்த்தார் மேயர்.. ஆன்மீக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு புதிய வரலாற்றை எழுதினார். அதன்படி, தனது கட்சி ஆண்களையே, இருக்கும் பெண்களுக்குப் பின்னால் குத்து விளக்குகளோடு அமர வையுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி வந்திருந்த பெண்களுக்குப் பின்னால் ஆண்களும் குத்து விளக்கைப் பிடித்துக் கொண்டு மறைவாக உட்கார்ந்தனர்.
புரோகிதர் பூஜைகளை நடத்தியபடி, எல்லாரும் அவங்க அவங்க திருமாங்கல்யத்தில் சந்தனமும் குங்குமமும் வச்சுக்கோங்க என்று கூறவே, பெண்கள் பயபக்தியுடன் குங்குமத்தையும், சந்தனத்தையும் எடுத்து தாலியில் வைத்துக் கொண்டனர். ஆனால் ஆண்களின் நிலைதான் ரொம்பக் கொடூரம்...எங்கு வைப்பது என்பது தெரியாமல் குத்து விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனராம்...!
அனேகமாக, இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற காமெடி களேபரம் இதுவாகத்தான் இருக்கும்!