ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து ஓடப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரு வழித்தடங்கள்
மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்பேடு-ஆலந்தூர்
இதில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 7.22 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தடத்தில் ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. முன்னதாக, பாதுகாப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையான குழுவினர் ஏப்ரல் மாதமும், அதற்கு முன்பும் இரண்டு கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.
பாதுகாப்பு ஆய்வு
இந்த ஆய்வில், ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள், சிக்னல் போன்ற செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. ரயில் பாதைகள், ரயில் நிலைய கட்டுமானங்கள், தொழில் நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பின்பு, மெட்ரோ ரயில் பாதுகாப்பு குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜெயலலிதா
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், கோயம்பேடு-ஆலந்தூர் நடுவேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ள இந்த நேரத்தில், அவரது கையால் பச்சை கொடி அசைத்து, ரயில் ஓட்டம் தொடங்கப்ப்டும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயிலுக்கான முதல் சோதனை ஓட்டத்தை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.