சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பு.. தமிழ் அமைப்பு சாடல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவ செயலாளர் இராச்குமார் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சென்னை பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.
இந்த தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் இரு மொழிக் கொள்கை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவது தமிழர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாகும்.
தமிழர்களுக்கு தமிழ் மொழியிலும் தமிழர் அல்லாத வெளியாட்களுக்கு ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளது. உலகில் உள்ள பல நாடுகளிலும் இத்தகைய தாய் மொழி மற்றும் அயல்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
இருப்பினும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள நிறுத்தங்களின் பெயர்கள் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. இது தமிழக அரசின் மொழிக் கொள்கையை மீறுவதாகவும் உள்ளது.
தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். நடுவண் அரசுடன் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தை அலுவல் மொழியாக பயன்படுத்துகிறது. அதனால் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தமிழ்நாடு அரசின் சேவைகளில் பயன்படுத்துதல் வேண்டும். இந்தியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
தில்லியில் உள்ள பெருநகர தொடர்வண்டி (மெட்ரோ) நிலையங்களில் இந்திக்கும் ஆங்கிலத்திற்கும் மட்டுமே இடமளிக்கப்படுகிறது. அங்கு தமிழுக்கு எந்த இடமும் இல்லை. இந்தி மாநிலங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை. தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற 60 ஆண்டு கோரிக்கையை இன்னும் இந்திய அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில் இந்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனமும் இந்தியை தமிழ் மக்களின் மீது திணிப்பது எந்த வகையிலும் தமிழர்கள் ஏற்க இயலாது.
தமிழக அரசின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப, 1976 இந்திய அலுவல் மொழி சட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என்பதையும் கருத்தில் கொண்டு பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை உடனே சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் (CMRL) அகற்றிட வேண்டும் என்றும் தமிழகத்தின் மொழிக் கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு, இராச்குமார் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மெட்ரோ ரயில் பெட்டிகளுக்குள், தமிழ் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக ஆங்கிலத்திலும் வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று ரயில் பயணிகள் பலரும் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.