முகப் பிளவு பிரச்சினைக்குள்ளான பாகிஸ்தான் குழந்தைக்குச் சென்னையில் கிடைத்த புதுமுகம்!
கண், கண்ணைச் சுற்றி உள்ள முக எலும்பு சரிவர இணையாமல் போனால், முகப்பிளவுகள் ஏற்படும். பொதுவாக இந்த குறைபாடானது ரேடியேஷன் பாதிப்பு மற்றும் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் உருவாகும்.
இதில், அரிய குறைபாடான இருபக்க முகப்பிளவு மற்றும் இரு கண்களிலும் பாதிப்பு, பாகிஸ்தான் நாட்டில், உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட அர்ஷத் அலி-ரசியா என்ற பெற்றோருக்கு பிறந்த நோமன் என்ற குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்பட்டு இருந்தது.
நோமனின் தந்தை அர்ஷத் அலி ஒரு விவசாயி என்பதால், நோமனின் குறைபாட்டை சரி செய்ய போதுமான பண வசதி இல்லை.
மேலும், பாகிஸ்தான் டாக்டர்களாலும் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியாது என கைவிட்ட நிலையில், தென் ஆசிய பசிபிக் பிராந்திய பல் மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆஸிப் ஆரின், மனிதாபிமான உதவியோடு, தற்போது 18 மாதமான நோமனுக்காக, சென்னையை சேர்ந்த முகச்சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியிடம் உதவி கேட்டு பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து, நோமனை அழைத்துக்கொண்டு அவனது பெற்றோர் பாகிஸ்தான் அரசின் அனுமதியோடு, சென்னைக்கு வந்து டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சிறுவன் நோமன் இருபக்க முகப்பிளவுடன், வலது கண் பார்வை 40 சதவீதத்துடன் இடது கண் முற்றிலும் பார்வை இழந்து காணப்பட்டான்.
டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தம் குழுவினருடன் 4 மணி நேரம் ஆபரேஷன் செய்து இடது கண்ணிற்கு செயற்கை கண் பொருத்தியும், வலது கண் பார்வை மற்றும் கண் இமைகளை சரிசெய்தும், எப்போதும் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை, கண்ணிற்கும், மூக்கிற்கும் இடையே இருந்த குழாயை அகற்றிவிட்டு, சிலிகான் டியூப் பொருத்தி அக்குறைபாட்டையும் சரி செய்தார்.
மேலும் இருபக்க உதடு பிளவை சீரமைத்து கீழ் உதடு போல் மேல் உதட்டையும், சீரமைத்து வாய் பகுதியை உருவாக்கி, அச்சிறுவன் உணவு உட்கொள்ள மற்றும் அவனின் முகத்தோற்றத்தை சரிசெய்தார். ஆபரேஷனுக்கு பின் நோமனின் முழுமையான தோற்றத்தை கண்டு, அவனது பெற்றோர் மனமகிழ்ச்சி அடைந்தனர்.