துடிக்கும் இதயத்தை 40 நிமிடம் நிறுத்தி அறுவை சிகிச்சை – சேலம் அரசு மருத்துவமனை சாதனை
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தின் இயக்கத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான முச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், நாற்பது நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூலம் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டது. சுமார் நான்கு மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.