மதுரைக்கும் பரவிய மெரினா மாணவர் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்ட 50 மாணவர்கள் கைது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை தெப்பக்குளம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்..
மதுரை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அருண் ஜேட்லியை சந்தித்தும் அவர்களது பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு நூதன போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் மெரினாவில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. எனினும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை தெப்பகுளம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் உள்ள நீர்த்தொட்டியின் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.