தேமுதிக-பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்ட ஜோதிடர்களை வேவு பார்க்கும் உளவுத்துறை
சென்னை: பாஜக, தேமுதிக கூட்டணி மலர காரணமாக இருந்ததாக கூறப்படும் இரண்டு ஜோதிடர்களை கண்காணிக்க உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக தலைமையில் தான் வழக்கமாக கூட்டணி அமையும். இந்த முறை தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
பிரதமராக மோடி வர வேண்டும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வலுவான கூட்டணி அமைய வேண்டும் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து பாஜக தலைமையிலான கூட்டணியில் முதலில் மதிமுக இணைந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தேமுதிக வந்தது. அதன் பின்பு பாமகவும் வந்து இணைந்து கொண்டது. மேலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஆகியவையும் வந்து சேர்ந்தன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெற காரணமாக இருந்தவர்கள் என கைகாட்டப்படுவர்கள் ஜோதிடர் ஷெல்வி, ஸ்ரீராம் முரளி ஆகியோர் தான் என தகவல் வெளியானது. இது ஆளும் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் அரசியல் ரீதியாக காய் நகர்த்தும் விதத்தில் செயல்படும் இந்த ஜோதிடர்களை கண்காணிக்குமாறு உளவுத்துறை மேலிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம். இதனையடுத்து இவர்களை இரவு, பகல் பாராமல் அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
விரைவில் இவர்கள் பற்றிய அதிரடி தகவல்கள் தமிழக மக்கள் முன்பு கொண்டு வரப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் ஆருடம் கூறுகின்றனர்.
இந்த தகவல் அரசல்புரசலாக ஜோதிடர்கள் கவனத்திற்கு வந்த போது ஊருக்கு ஜோதிடம் பார்த்தது போதும், இனி நமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என ஜோதிடம் பார்த்தே ஆக வேண்டும் என இருவரும் முடிவு செய்துவிட்டார்களாம்.