கபாலி வெற்றி-தோல்வின்னு பேச நினைத்தேன்.... வார்த்தை விடுபட்டு விட்டது.. வைரமுத்து விளக்கம்
சென்னை: கபாலி படம் தோல்வி என பேசிய சர்ச்சையில் சிக்கியது குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அதில், படத்தின் வெற்றி, தோல்வி என சொல்ல நினைத்து ஒருவார்த்தை விடுபட்டதை பின்னர் உணர்ந்தேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.
கபாலி தோல்விப் படம் என வைரமுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்திருந்தார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் வைரமுத்துவை ஆதரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சர்ச்சை குறித்து வைரமுத்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடவுள் நம்பிக்கை பேச்சு
கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது.
புரிந்து கொள்ளுங்கள்...
அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாக இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை.
வெற்றி வார்த்தை விடுபட்டு போனது...
ஏற்றுக் கொள்ளாததைக் கூட நாம் புரிந்து கொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையை புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது, ஆண்-பெண் உறவுகள்- இல்லறம் அன்பு- காதல்- கண்ணீர்- அரசியல்- கலை- அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தேவைகளை ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன்.. அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.
ரஜினியை குறைத்து சொல்வதல்ல..
என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது; ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம்...அதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
ரஜினியிடம் விளக்கம்
இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது. தயவு செய்து வரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.