தங்கத்தின் விலையை நிர்ணயிக்க போகுது இந்தியா.. வீடுகளில் குவிந்துள்ள 25,000 டன் தங்கம்! செம சர்ப்ரைஸ்
சென்னை: தங்கத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட நம்முடைய இந்தியாவில், ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார மாற்றம் விரைவில் நடக்க போகிறதாம்.. அதாவது அடுத்த 10 வருஷத்துக்குள், நம்முடைய நாட்டு மக்களின் தங்க தேவையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை நம்முடைய நாட்டில் உள்ள சுரங்கங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என்று தொழில்துறை தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
CCI என்று சொல்லப்படும் இந்திய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த ரத்தினங்கள் மற்றும் நகைகள் தொடர்பான மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.. இதில் உரையாற்றிய உலக தங்க கவுன்சிலின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின், பல்வேறு முக்கிய தகவலை தன்னுடைய உரையில் வெளிப்படுத்தினார்.

இனி நிலைமை மாறும்
குறிப்பாக அவர் சொல்லும்போது, "இப்போது நாம் தங்க உற்பத்திக்கு மற்ற நாடுகளை சார்ந்துள்ளதாலும், தங்கத்தை வர்த்தகம் செய்வதற்கான சரியான "தங்க வங்கி அமைப்பு" இங்கு முழுமையாக இல்லாததாலும், நாம் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் விஷயத்தில் லண்டனை பின்பற்ற வேண்டிய நிலைமையில் உள்ளோம்..
ஆனால், இனி இந்த நிலைமை மாறும்.. அடுத்த 10 வருஷத்தில், மொத்த தேவையில் சுமார் 20 சதவீதத்தை இந்தியாவின் சொந்த தங்க சுரங்கங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும்.
ரிசர்வ் வங்கி மற்றும் நாட்டின் வங்கி அமைப்பு மேலும் வலிமையை நோக்கி செல்ல செல்ல, நாம் பிறரை சார்ந்திருப்பதை நிறுத்தி கொள்வோம்... அதுமட்டுமல்ல, தங்கத்தின் விலையையும் நாமே நிர்ணயிக்கும் சக்தி மிக்க நாடாக மாறிவிடுவோம்...
இன்னும் 3 வருடங்கள்தான்
எதிர்கால அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை கட்டாயமான அம்சங்களாக இருக்கும்.. இந்த நேர்மறையான மாற்றங்களின் விளைவாக, அடுத்த 2 அல்லது 3 வருடத்துக்குள், சர்வதேச அளவில் நம்முடைய இந்தியா, ஒரு உலகளாவிய நகை மையமாக உருவெடுக்கும் என்று சச்சின் ஜெயின் தன்னுடைய நம்பிக்கையை தெரிவித்தார்.
ஆக, எதிர்காலத்தில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கியமான சக்தியாக நம்முடைய இந்தியா மாறுவோம் என்று சச்சின் ஜெயின் கூறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
வீடுகளில் 25,000 டன் தங்கம்
அதேபோல, இந்திய மக்கள், தங்கள் வீடுகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் எவ்வளவு தங்கத்தை வைத்துள்ளனர் என்பது குறித்து ஆதித்யா பிர்லா குழுமத்தின் "நோவல் ஜூவல்ஸ்" தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் கோலி இந்த மாநாட்டில் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக, இந்திய நுகர்வோரிடம் சுமார் 25,000 டன் தங்கம் உள்ளது, ஆனால், ரிசர்வ் வங்கியிடம் வெறும் 800 டன் தங்கம் மட்டுமே உள்ளது.. இது கிட்டத்தட்ட 50:1 என்ற மிகப்பெரிய விகிதத்தில் உள்ளது. அதாவது, அரசாங்கத்திடம் உள்ளதை விட இந்திய மக்கள் 50 மடங்கு அதிகமாகத் தங்கத்தை வைத்திருக்கிறார்கள்.
சர்வதேச தங்கத்தின் விலை
ஆனால், சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கு அரசாங்கத்திடம் 1,000 டன் தங்கமும், பொதுமக்களிடம் வெறும் 200 டன் தங்கமும் மட்டுமே இருக்கிறது.
உலகிலேயே தங்கத்தை அதிகமாக வாங்கும் மிகப்பெரிய நுகர்வோராக இந்திய மக்கள் இருந்தபோதிலும், நம்முடைய நாட்டின் தேவை என்பது சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில்லை.. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது" என்று சந்தீப் கோலி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications