ஆட்டை கடித்து, மாட்டை கடித்து.. இப்போ வங்கி துறையிலும்..! 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Axis Bank!
மும்பை: ஆக்சிஸ் வங்கி 2025-26 நிதியாண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையை சுமார் 3000 குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பிற்கு முக்கிய காரணம், வங்கியின் நீண்டகால தொழில்நுட்ப முதலீட்டு உத்தியின் வாயிலாக குறைக்கப்பட்டது என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கித்துறையில் ஆட்டோமேஷன் என்பது நீண்ட காலமாக நடந்து வருகிறது, ஏடிஎம் மெஷின் வந்த பின்பு வங்கியில் காசாளருக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, குறிப்பாக யூபிஐ மூலம் அனைத்து பேமெண்ட்களுக்கும் செய்ய முடியும் என்பதால் காசாளருக்கான வேலை குறைந்து வருகிறது.

இப்படி பணம் வித்டிரா செய்வது முதல் வங்கியில் கடன் வாங்குவது வரையில் ஆன்லைன் வாயிலாக செய்யும் முறை தற்போது வங்கியில் டிஜிட்டல் சேவையாக மாறியுள்ளது. இந்த ஏஐ காலத்தில் இன்னும் வேகமான மாற்றங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் வங்கித்துறையில் ஊழியர்கள் தேவை என்பது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி, காலாண்டு முடிவுகள் அறிவிப்புக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது, ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தது பற்றி விளக்கினார். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ததன் விளைவாக வங்கியின் இயக்கச் செயல்திறன் அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன் மூலம் 2024-25 நிதியாண்டில் 1.04 லட்சமாக இருந்த ஊழியர் எண்ணிக்கை, 2025-26-ல் 1.01 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்தக் குறைப்பு எந்த ஒரு துறைக்கு மட்டும் குறிவைக்கப்படவில்லை. வங்கியின் பல்வேறு பிரிவுகளிலும் இயற்கையாகவே ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் மனித தலையீடு தேவையில்லாத இடத்தில் இருந்து ஊழயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதே நிதியாண்டில் ஆக்சிஸ் வங்கி நாடு முழுவதும் சுமார் 400 புதிய கிளைகளைத் திறந்துள்ளது. இதற்காக ஊழியர்களை பணியமர்த்திய போதிலும், தொழில்நுட்பத்தின் உதவியால் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.

ஐடி, டெக் சேவை, டிஜிட்டல் சேவை துறையில் தான் ஏஐ வாயிலாகவும், ஆட்டோமேஷன் வாயிலாகவும் அதிகப்படியான பணிநீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வங்கித்துறையிலும் தொழில்நுட்பத்தின் வாயிலாக பணிநீக்கம் (ஊழியர்கள் குறைப்பு) நடந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 3-4 ஆண்டுகளாக வங்கியின் இயக்கச் செலவில் 9 முதல் 10 சதவீதம் வரை தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. வர்த்தக சுழற்சியைப் பொருட்படுத்தாமல் இந்த முதலீடுகள் தொடர்ந்தன, இது நீண்டகால வளர்ச்சிக்கான மூலதனமாக அமைந்துள்ளது என ஆக்சிஸ் வங்கி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஏஐ தாக்கம் இல்லை
செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் தற்போது செயல்முறைகளை எளிதாக்கவும், பரிவர்த்தனைகளை வேகப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஊழியர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் அளவுக்கு இன்னும் AI எங்களது வங்கியில் பங்களிக்கவில்லை என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 2026 காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் லாபம் ரூ.7,071 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் ரூ.7,117 கோடியாக இருந்ததை விட சற்று குறைவு. முழு நிதியாண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.1 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கித் துறையில் தொழில்நுட்ப மாற்றம் எப்படி ஊழியர் அமைப்பை மாற்றி வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதேவேளையில் ஏஐ சேவைகளை வங்கியின் ஒவ்வொரு நிர்வாக கட்டத்திலும் பயன்படுத்தினால் இன்னும் அதிகமான மறுசீரமைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் பல இடங்களில் முக்கிய வங்கிகளே 1-2 ஊழியர்களை வைத்து நிர்வாகம் செய்து வருகிறது. ஏஐ சேவையால் பல வங்கிகள் மூடப்பட்டும் வருகிறது. ஆனால் இந்தியாவில் வங்கி கிளைகள் மூடப்படாது, டிஜிட்டல் சேவைகளை பெரு நகர மக்களுக்கு அளித்துவிட்டு, வங்கி கிளைகளை பெரு நகரங்களில் இருந்து 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications